முற்றாக முடங்கியுள்ள யாழ்.நகரம்

-யாழ் நிருபர்-

அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில், யாழ்ப்பாண குடாநாட்டின் இயல்பு நிலை முற்றாக செயலிழந்து, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெறுகின்றது.

பாடசாலைகள் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, புகையிரத சேவை தபால் சேவைகள் என்பன முற்றாக செயலிழந்துள்ளன.

அத்தோடு யாழ்ப்பாண நகரத்தின் வீதிகளில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதோடு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.