நுவரெலியாவில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு!
உயிர்கொல்லி போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதுக்கு நுவரெலியா பொலிஸாரால் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் நுவரெலியா பொலிஸ் நிலைய பொலிஸாரால், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் நகரில் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக, நுவரெலியாவில் பொது மக்கள் அதிகம் கூடும் இடமாக இருக்கும் நுவரெலியா பிரதான அஞ்சல் நிலைய வளாகம் மற்றும் பிரதான பேருந்து தரிப்பிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், நுவரெலியா பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமை தாங்கி, முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு இத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர் .

இதன் போது, போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறை அடங்கிய, மூன்று மொழிகளிலான சுவரொட்டிகளை விநியோகம் செய்தனர்.

பொலிஸ் நிலையம் – 052-2222222, 052-2222226, குற்றப்பிரிவு – 052 2222444 மற்றும் செயற்பாட்டு அறை 052- 2222398 எனும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் பொதுமக்களும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்க முடியுமென பொலிஸார் தெரிவித்தனர் .

