கல்முனையில் 4620 லீட்டர் டீசல் மீட்பு : ஒருவர் சந்தேகத்தில் கைது


கல்முனையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி டீசல் எரிபொருள் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வீடொன்றுடன் இணைந்த களஞ்சியசாலையில் டீசல் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த வீடொன்றுடன் இணைந்த களஞ்சியசாலையில் மேற்பார்வையாளராக கடமையாற்றிய 39 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் , 22 பரல்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 17 இலட்சத்தி 64,840 ரூபா பெறுமதியான சுமார் 4620 லீட்டர் டீசல் மீட்கப்பட்டுள்ளன.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி வழிகாட்டலில் அப்பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர்களான கே.எல்.எம் முஸ்தபா , அனுரகுமார தலைமையிலான பொலிஸார் குழுவினரால் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும்  இச்சோதனை நடவடிக்கையானது   கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான  பிரதி பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைககமைய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின்   வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.