மட்டு.மண்முனை பகுதியில் புதையல் தோண்டிய 9 பேருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள, மண்முணை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, பிரதேச செயலக பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேரையும், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

மட்டு.மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, கடந்த மார்ச் 31 ஆம் திகதி இரவு, மண்முணை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மொரட்டுவ, கட்டுகஸ்தோட்டை, இங்கிராக்கொட போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 9 பேரை கைது செய்ததுடன், பூஜை பொருட்களை மீட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் கடந்த முதலாம் திகதி முன்னிலைப்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்