அதிக அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வெப்பத்தினால் உடல்நிலை மோசமடைந்து உயிரிழப்பு கூட ஏற்படலாம் என சுகாதார அமைச்சின் சமூக விசேட வைத்திய நிபுணர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பத்தினால் தசைப்பிடிப்பு, அதீத சோர்வு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் போன்ற வெளியில் பணிபுரிவோர் அதிகளவில் நீர் அருந்துவதுடன் மதுபானம், கோப்பி மற்றும் அதிக இனிப்புள்ள பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

இளநீர், தேசிக்காய்சாறு, தோடம்பழச் சாறு போன்ற பானங்களையும், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி போன்ற உணவுகளையும் உட்கொள்வது சிறந்தது என வைத்தியர் சந்தனி விதான தெரிவித்துள்ளார்.

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்லிய நிறமுடைய பருத்தி ஆடைகளை அணிவதுடன், வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பியைப் பயன்படுத்துவது அவசியமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.