
மாணவரைத் தாக்கிய மூன்று மாணவர்களையும் பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்ப உத்தரவு!
ஹட்டன் நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றின் மாணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட மூன்று மாணவர்களையும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரை வேரலவத்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹட்டன் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று மாணவர்களும் கடந்த 28 ஆம் திகதி இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களுக்கிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், அந்தச் சம்பவம் பாடசாலையிலேயே சமரசம் செய்யப்பட்டதன் பின்னர், குறித்த தாக்குதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
இதனையடுத்து, தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் மாணவனின் தாயாரால் கடந்த 28 ஆம் திகதி ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டது.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்களும் பழைய மாணவரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் மாணவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
