கமல் அமரசிங்க மீண்டும் விளக்கமறியலில்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று திங்கட்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட கெப் வாகனம் ஒன்று தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையை ஆரம்பித்தது. பின்னர் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்றது.

சட்டவிரோதமாக வாகனத்தைப் பொருத்த வசதியாக, ஒரு கெப் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட செஸி இலக்கத்தை மாற்றுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து, எடைச் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த வாகனத்திற்கு ‘E’ பிரிவு இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள உதவியமை, செஸி திருத்த ஆவணத்தை சட்டவிரோதமாக மறைத்து வைத்தமை மற்றும் பொய்யான தகவல்களை வழங்கி அந்த வாகனத்தைப் போலியான முறையில் பொருத்துவதற்குத் துணையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் கமல் அமரசிங்க மீது சுமத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, கடந்த 27 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, குறித்த சந்தேக நபர் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.