தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை!

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பேருந்து போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச) டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டாலும், ஏனைய பகுதிகளில் டிப்போக்களில் எரிபொருள் இல்லை எனத் தெரிவிக்கப்படுவதாகவும், இதனால் பேருந்து உரிமையாளர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமையால் வரும் திங்கட்கிழமை பேருந்து சேவைகள் கணிசமான அளவு பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்த அவர், இது குறித்து அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன மேலும் கூறியதாவது:

“பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை தயாரித்து முடிக்கவில்லை. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாக சுமார் 1,700 தூர இடங்களுக்கான பேருந்துகளுக்கு மாத்திரமே அது தயாரிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளிடமிருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சில பகுதிகளில் இ.போ.ச டிப்போக்களில் எரிபொருள் வழங்கப்படுகிறது, ஆனால் ஏனைய டிப்போக்களுக்குச் செல்லும்போது அங்கு எரிபொருள் இல்லை என்கிறார்கள். இது ஒரு பாரிய பிரச்சினை.

எதிர்வரும் திங்கட்கிழமை எம்மால் பேருந்துகளைச் இயக்க முடியாது. பெரும்பாலும் பேருந்து சேவைகள் 50% வரை வீழ்ச்சியடையக்கூடும். கடந்த வாரம் எமது பேருந்துகளில் எரிபொருள் இருந்தது, ஆனால் தற்போது அது தீர்ந்துவிட்டது. QR முறைமையின் கீழ் பேருந்துகளுக்கு 60 லீற்றர் மாத்திரமே கிடைக்கிறது. டிப்போக்களுக்குச் சென்று எரிபொருள் நிரப்புமாறு அதிகாரசபைகள் அறிவித்துள்ளன. பகல் வேளையில் டிப்போக்களில் வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பினால் பேருந்துகளைச் ஓட்ட முடியாது. கடந்த சில நாட்களாகியும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கோ அல்லது போக்குவரத்து அதிகாரிகளுக்கோ இன்னும் முடியாமல் போயுள்ளது.” என தெரிவித்துள்ளார்.