ஈரானின் கப்பலா? அமெரிக்காவின் விமானமா? நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன?

இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றுக்கு வருகைத் தந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஈரான் கப்பல் நாட்டிற்குள் உடனடியாக அனுமதிக்கப்படாமைக்கான காரணம் தொடர்பில் தௌிவுப்படுத்தியுள்ளார்.

அத்துடன் தற்போது நிலவி வரும் போர்ச்சூழலில் இலங்கை நடுநிலை வகிப்பது குறித்தும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதி கீழ்கண்டவாறு தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சூழ்நிலைகள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இது குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு இடமளிக்கும் வகையில் பிரேரணையை முன்வைத்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பிரச்சினை தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே எமது நிலைப்பாடு நடுநிலைமை என்பதாகும். எமது தாய்நாட்டின் கௌரவம், நீதிக்கான கேள்வி மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை எமது நடுநிலைமையைப் பேணுவதன் மூலமே எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே, எவ்வித அழுத்தங்கள் மத்தியிலும் இந்த நடுநிலைமை நழுவிப்போக இடமளிக்க மாட்டோம்.

ஆனால், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுவதை நான் அறிவேன். நாம் ஏதோ ஒரு தரப்பிற்கு சார்பாக இருக்கிறோம் என்றும், சில தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்பது போன்றும் கருத்துக்கள் நிலவுகின்றன.

அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஈரானிய கப்பல்கள் குறித்த பிரச்சினை. குறிப்பாக, 2026 பிப்ரவரி 26 ஆம் திகதி எம்மிடம் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது. மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு ஒரு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒத்துழைப்பை மேம்படுத்தும் விஜயமாக இலங்கைக்கு வர விரும்புவதாகவும் எம்மிடம் கோரப்பட்டது.

மார்ச் மாதத்தின் 9 மற்றும் 13 ஆம் திகதிகளில் அந்த அனுமதியை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

அதே நாள் மாலை ஐக்கிய அமெரிக்கா ஒரு கோரிக்கையை முன்வைத்தது. தமது நாட்டிற்கு அருகில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரினார்கள்.

எமது மேசை மீது இரண்டு ஆவணங்கள் இருந்தன. ஒன்று ஈரான் விடுத்த கோரிக்கை – மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் தமது கடற்படைக் கப்பல்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியிருந்தது.

மறுபுறம் ஐக்கிய அமெரிக்கா விடுத்த கோரிக்கை – தமது கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் எமது மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தது.

நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன?

நாம் மிகத் தெளிவான ஒரு முடிவை எடுத்தோம். அந்த நேரத்தில் போர் குறித்த சமிக்ஞைகள் ஏற்கனவே தோன்றியிருந்தன.

நாம் அந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. அதுதான் நடுநிலைமை. நான் இங்கே கேட்கிறேன், ஏன் ஈரானிய கப்பல்களுக்கு அனுமதி வழங்கவில்லை என வினவப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது.

ஒருவேளை அனுமதி வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? எமது ஒட்டுமொத்த நடுநிலைமையும் நழுவிப்போயிருக்கும். நாம் ஒரு தரப்பிற்குச் சார்பாகச் செயற்பட்டிருப்போம். இல்லையெனில் நாம் மற்றைய தரப்பிற்கும் இடமளிக்க வேண்டியிருந்திருக்கும்.

அவ்வாறு நடந்திருந்தால், எங்கோ தொலைதூரப் பிராந்தியத்தில் உள்ள அந்தப் போர் மோதலானது மத்தள விமான நிலையத்திற்கும் கொழும்புத் துறைமுகத்திற்கும் அருகில் வந்திருக்கும். நாம் அதனைச் செய்யவில்லை. அத்தகைய அழுத்தங்கள் மத்தியிலும் அந்த நடுநிலைமை கொள்கையை பாதுகாத்துள்ளோம்.