
கத்தாரின் எரிவாயு முனையத்தில் தாக்குதல் – முடங்குகிறதா சர்வதேச விநியோகம்?
கத்தாரின் ‘ராஸ் லப்பான்’ எரிவாயு முனையத்தின் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதலானது, உலகளாவிய எரிவாயு சந்தையின் எதிர்காலப் பார்வையை முற்றாக மாற்றியமைத்துள்ளதாக பிரித்தானியாவைச் சேர்ந்த ‘வூட் மெக்கன்சி’ (Wood Mackenzie) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்ததையடுத்து, மார்ச் மாத தொடக்கத்தில் கத்தார் தனது உற்பத்திகளை நிறுத்தி ‘தவிர்க்க முடியாத சூழல்’ (Force Majeure) என அறிவித்திருந்தது.
இதனால் உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் குறுகிய காலத் தடங்கல் மட்டுமே ஏற்படும் என முன்னதாகக் கணிக்கப்பட்டது.
இருப்பினும், கத்தாரின் மிக முக்கியமான எரிவாயு முனையமான ‘ராஸ் லப்பான்’ இந்த வாரம் ஈரானியத் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளதால், இந்த விநியோகத் தடையானது நீண்ட காலத்திற்குத் தொடரக்கூடும் என ஆய்வாளர்கள் தற்போது எச்சரித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு முன்னர், கத்தாரின் எரிவாயு உற்பத்தியை வழமைக்குக் கொண்டுவர நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை எடுக்கும் என கணிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சேதங்களின் அளவைப் பொறுத்து இந்த கால எல்லை மேலும் நீடிக்கலாம்,” என வூட் மெக்கன்சி தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் விநியோகம் தடைப்படும்போது, உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் 1.5 சதவீத வீழ்ச்சி ஏற்படும் எனவும் அந்த நிறுவனம் கணித்துள்ளதாகவும் அல்ஜெஸீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
