மாணவிகளை பற்றி அவதூறு பரப்பிய மாணவனை 14 நாட்கள் சிறுவர் காப்பகத்தில் தடுத்துவைக்க உத்தரவு!

-யாழ் நிருபர்-

சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவன் ஒருவரை, 14 நாட்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைக்க, ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை, கூரிய ஆயுதமொன்றால் வெட்டிக் காயப்படுத்திய குற்றத்துக்காக, குறித்த மாணவனின் தந்தையாரையும் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர், வேலணைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர், மாணவி ஒருவரது புகைப்படம் மற்றும் இன்னொரு மாணவியின் தாயாரது தொலைபேசி இலக்கத்தையும் “ரிக்ரொக்” சமூக ஊடகத்தில், பாலியல் ரீதியான வாசகங்களுடன் பதிவிட்டு அவதூறு பரப்பியிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த அவதூறால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது உறவினர்கள், அவதூறு பரப்பியவரின் வீடிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர்பில் வினவியுள்ளனர்.

இதன்போது, அவதூறு பரப்பிய மாணவனின் தந்தையார், நியாயம் கேட்கச் சென்ற ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி காயப்படுத்தியதால், குறித்த நபர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.

இவ்வாறான பின்னணியில், ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிசில் இரு மாணவிகளின் பெற்றோரும் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணையை முன்னெடுத்த ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிசார் இருவரையும், ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

மாணவனை சிறுவர் சீர்திருத்த மையத்தில் 14 நாட்களும், மாணவனின் தந்தையை 14 நாட்களும் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிடிருந்தமை முறிப்பிடத்தக்கது.