“நேட்டோ நாடுகளின் உதவி எங்களுக்கு இனி தேவையில்லை” – ட்ரம்ப்

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் ஏனைய கூட்டாளிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.

தமது Truth Social தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அமெரிக்கா இனி நட்பு நாடுகளின் உதவியை எதிர்பார்க்கவில்லை என்றும், உண்மையில் தங்களுக்கு அவர்களின் உதவி தேவையே இல்லை என்றும் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் உடனான போரில் நேட்டோ நாடுகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளத் தயங்குவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“நேட்டோ நாடுகளின் உதவி எங்களுக்கு இனி ‘தேவையில்லை’ அல்லது நாங்கள் அதை விரும்பவில்லை – உண்மையில் எங்களுக்கு அவர்களின் உதவி எப்போதும் தேவைப்பட்டதில்லை ” என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

நேட்டோ அமைப்பிற்காக அமெரிக்கா ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவழிப்பதாகவும், ஆனால் அவசரக் காலங்களில் அந்த நாடுகள் அமெரிக்காவிற்கு உதவ முன்வருவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை ஒரு “ஒருதலைப்பட்சமான வீதி” என்று அவர் விமர்சித்துள்ளார்.

நேட்டோ மட்டுமன்றி ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளையும் அவர் பெயரிட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த நாடு என்றும், தங்களுக்கு யாருடைய உதவியும் அவசியமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பெப்ரவரி இறுதியில் தொடங்கின. ஹார்முஸ் நீரிணை யை (Strait of Hormuz) மீண்டும் திறக்க மற்றும் எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க நட்பு நாடுகளின் கடற்படை உதவியை ட்ரம்ப் கோரியிருந்தார். இருப்பினும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் இதில் நேரடி இராணுவப் பங்களிப்பை வழங்க மறுத்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த ஆக்ரோஷமான அறிக்கை வெளியாகியுள்ளது.