
அரச விடுமுறைக்கு புதன்கிழமை தெரிவு செய்யப்பட காரணம் இது தான்!
அரசாங்க சேவைகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவே புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் பின்வருவனற்றைக் குறிப்பிட்டார்.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் விடுமுறை வரும்போது, அலுவலகப் பணிகள் தொடர்ந்து பல நாட்களுக்குப் பாதிக்கப்படுகின்றன.
எனவே, விடுமுறையை புதன்கிழமைக்கு மாற்றுவதன் மூலம், நீண்டகாலத் தடங்கல் இன்றி அரசாங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அரசாங்க அலுவலகங்களை முற்றாக மூடாமல், பொதுச் சேவைகளைப் பராமரிப்பதற்கும் வார முழுவதும் அத்தியாவசியப் பணிகள் இயங்குவதை உறுதி செய்வதற்கும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையால் உருவாகியுள்ள எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அரச துறைக்கு புதன்கிழமை விடுமுறை வழங்க அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
