
தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் நியமனம்!
திருகோணமலை-தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றார்.
தம்பலகாமம் பிரதேச செயலாளராக இருந்து வந்த திருமதி ஜெ.ஸ்ரீபதி திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க (காணி) அதிபராக பதவி உயர்வு பெற்றுச் சென்றதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டார்.
காரைதீவைச் சேர்ந்த சதிசேகரன்( சதீஷ்) இறுதியாக லாகுகல உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றியிருந்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் சதிசேகரன், காரைதீவில் பயின்று, திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரம் இந்து கல்லூரியில், 2012 முதல் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார்.
பின்னர், காரைதீவு பிரதேச செயலகத்தில், 2013- 2015 காலப் பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவேளை, இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று இலங்கை நிருவாக சேவையில் இணைந்தார்.
2015- 2019 காலப் பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச உதவி செயலாளராகவும், 2019-2024 காலப் பகுதியில் திருக்கோவில் பிரதேச உதவி செயலாளராகவும் சேவையாற்றினார்.
2024 முதல் 2026 வரை லாகுகல உதவிப் பிரதேச செயலாளராக சேவையாற்றியிருந்தார்.
இதுவரை காலமும் (11 வருடங்களாக) உதவி பிரதேச செயலாளராக சேவையாற்றி வந்த அவர், இன்று முதல் பதவி உயர்வு பெற்று பிரதேச செயலாளராகிறார்.
