
மண்டைதீவு சுற்றுலா மைய விவகாரம் : நிதித் துஸ்பிரயோகம் குறித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு!
-யாழ் நிருபர்-
வேலணை – மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் (எகோ ரூரிசம்) அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வும் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதனால் இந்த முறைப்பாடு இன்று புதன்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மண்டைதீவில் சுற்றுலா அமைச்சினால் அமைக்கப்பட்ட “எக்கோ ரூறிசம்” திட்டம் தோல்வியடைய அன்றிருந்த அரச அதிகாரிகளே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் அன்றைய யாழ் மாவட்ட அரச அதிபராக இருந்த நாகலிங்கம் வேதநாயகன், அன்றைய காலப் பகுதியில் வேலணை பிரதேச செயலர்களாக இருந்த சுகுணாரதி தெய்வேந்திரம் மற்றும் அ.சோதிநாதன் ஆகியிரால் வேலணை பிரதேசத்திற்கு சுமார் 77 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் பின் கருத்துத் தெரிவித்த பிரகலாதன் கூறுகையில்,
வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016 ஆண்டு மண்டைதீவில் சுற்றுலா அமைச்சினால் அமைக்கப்பட்ட திட்டமே இந்த “எக்கோ ரூறிசம்” திட்டமாகும்.
இது 77 மில்லியனுக்கும் அதிக நிதி முதலீட்டில் செயலுருவாக்கம் பெற்றது.
ஆனாலும் முறையான பொறிமுறை திட்டவரைபு இல்லாமையால் அது அதன் நோக்கத்தில் தோல்வி கண்டுள்ளது.
குறிப்பாக திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரே இறங்கு துறையை அமைப்பதற்காக 50 மில் லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யபட்டது.
2016 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட குறித்த பொருட்கள் கடந்த பல வருட காலமாக வேலணை கடற்கரையில் பாவனையின்றி அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றன.
அதுமட்டுமல்லாது இத்திட்டம் தோல்வியடைந்து அல்லது மோசடிகளால் பாதிக்கப்பட்டதை அன்றிருந்த பிரதேச செயலர் மூடி மறைத்து வந்தார்.
அதன் பின்னர் மத்திக்கு குறித்த விடையம் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அது தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் அன்றிருந்த மாவட்ட செயலளர் வேதநாயகன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முற்றாக மறைத்து தனது அதிகாரிகளை பாதுகாத்திருந்தார்.
அதுமட்டுமல்லாது அதிகாரங்களை பிரயோகித்து 2020 ஆம் ஆண்டு அந்த பொறுப்பை வேலணை பிரதேச சபையிடம் திணித்து பொறுப்பேற்கச் செய்தனர்.
எனவே இந்த திட்டத்தில் ஏப்பமிடப்பட்ட அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உண்மை கண்டறியப்பட்டு இழக்கப்பட்ட நிதியை மீட்டு சபையிடம் வழங்க வேண்டும் என்ற நோக்குடனேயே குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
