நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம் இது தான்!!
நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று செவ்வாய்க்கிழமை விளக்கமளித்துள்ளார்.
எரிபொருள் விலைகள் ஒரே அடியாக பெருமளவு உயர்வதைத் தவிர்ப்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“பொதுவாக முந்தைய மாதத்தின் விலைகளை சரிசெய்தே நாங்கள் விலைகளை அதிகரிக்கிறோம். தற்போது எங்களிடம் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு நிலையாக இருந்தபோதிலும், அடுத்த மாதத்திற்காக வரும் கப்பல்களின் எரிபொருள் விலை பெருமளவு அதிகரித்து வருகின்றது. எனவே, தற்போதுள்ள இருப்புகளைப் பாதுகாத்து, விலையை சமநிலைப்படுத்த நாங்கள் எதிர்பார்த்தோம்.
அதன்படி, எரிபொருள் விலைகள் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் உயர்வதைத் தவிர்க்கவும், இருக்கும் இருப்புகளை மாதங்களுக்கு இடையில் கவனமாகப் பகிர்ந்து பயன்படுத்தவும் விலையை சமநிலைப்படுத்தினோம். எரிபொருள் பதுக்கல் மாஃபியாக்களைக் கட்டுப்படுத்துவதுடன், வரிசைகள் உருவாகாமல் பொதுமக்கள் நீண்ட காலத்திற்கு ஒரே விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம். உலகச் சந்தையில் விலை குறைந்தால், அடுத்த சில நாட்களில் நிச்சயமாக எமது எரிபொருள் விலைகளைக் குறைக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
