நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது!
ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இன்று திங்கட்கிழமை மீண்டும் ஹட்டன் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீண்டகாலமாக கல்கிஸ்ஸையிலிருந்து ஹட்டன் பகுதிக்கு வந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதற்கமைய கடந்த 03 ஆம் திகதி கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் போதைப்பொருளுடன் வந்து கொண்டிருந்த போதே, ஹட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து 11,850 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 04 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் ஹட்டன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, அவரிடம் போதைப்பொருள் கொள்வனவு செய்த 11 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் சுமார் மூன்று வருடங்களாக ஹட்டன் பகுதிக்கு போதைப்பொருளைக் கொண்டு வந்து, ஒரு பொதி 5,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
