மீண்டும் அவசரகாலச் சட்டம்?

நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. அதன் பின்னர் அது நீடிக்கப்படாததால், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரங்களும் செயலிழந்திருந்தன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் போன்ற சூழல்களைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை மீண்டும் நீடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவசரகால நிலையை நீடிப்பதற்கான உத்தியோகபூர்வ யோசனை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கும், சட்டவிரோத எரிபொருள் சேமிப்புகளைத் தடுப்பதற்கும் இந்த அதிகாரம் அவசியமாகிறது எனத் தெரிவித்தார்.