-நுவரெலியா நிருபர்-
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள், இன்று திங்கட்கிழமை காலை முதல் மூடப்பட்டுள்ளன.
நுவரெலியாவிற்கு வாடகை முச்சக்கரவண்டியில் சுற்றுலா நிமிர்த்தம் வருகை தந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர், நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன் வரிசையில் காத்திருந்தனர்.
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், மக்கள் நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில், இன்றும் இரண்டாவது நாளாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், நானுஓயா மற்றும் நுவரெலியாவில் சில நிலையங்களில் “இங்கு பெட்ரோல் இல்லை” என்ற அறிவிப்பு காட்சி பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நிலவும் கேள்விக்கு அதிகமாக, எரிபொருளை நுகர்வோர்கள் கொள்வனவு செய்து வருவதால் இவ்வாறு நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் தட்டுப்பாடு நிலவி, வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



