பருத்தித்துறை கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம்-வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன மீனவர், இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கடலுக்குச் சென்ற குறித்த மீனவர் பயணித்த படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியது.

அதனை சீர்செய்ய முற்பட்ட போது, கடலில் வீழ்ந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவருடன் சென்ற சக மீனவர்கள் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் சுமார் 25க்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு, சடலத்தை மீட்டு, இன்று காலை 10 மணியளவில் கரை சேர்த்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட மீனவர், பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.