எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது, மக்கள் அச்சப்பட தேவையில்லை – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக் காரணமாக, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.A. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட குரல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் கூறுகையில், “ஈரான் போர் ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டின் சில பகுதிகளில் மக்கள் தேவையற்ற முறையில் குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் அவ்வாறு குழப்பமடைய வேண்டிய எந்த அவசியம் இல்லை.

நாங்கள் எமது முழுமையான கையிருப்பு விபரங்களைச் சரிபார்க்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கும் அதிகமான காலத்திற்கு எவ்விதப் பிரச்சினையுமின்றி எம்மால் சேவைகளை முன்னெடுக்க முடியும்.

எங்களிடம் தற்பொழுது உள்ள கையிருப்பு மற்றும் நாட்டை வந்தடையவுள்ள எரிபொருள் கப்பல்களின் விபரங்களின்படி இன்னும் 37 நாட்களுக்குப் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

ஒட்டோ டீசல்இன்னும் 35 நாட்களுக்குப் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. விமான எரிபொருள் இன்னும் 47 நாட்களுக்குப் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

தற்போது எம்மிடம் உள்ள கையிருப்பு மற்றும் வந்தடையவுள்ள கப்பல்களின் அளவை வைத்துப் பார்த்தால், இதற்குப் பிறகு ஒரு கப்பல் கூட வராவிட்டாலும் கூட,எம்மால் இந்த குறிப்பிட்ட நாட்களுக்கு எவ்விதத் தடையுமின்றி எரிபொருளை விநியோகிக்க முடியும்.

அடுத்ததாக, எம்மிடம் உள்ள சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் (பெற்றோல், டீசல் போன்றவை) பெரும்பாலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து வருவதில்லை.

ஏனெனில் அங்கிருந்து வரும்போது கப்பல் கட்டணம் அதிகமாகும். கடந்த காலங்களில் இந்தியா, சிங்கப்பூர், கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்தே எரிபொருள் கொண்டுவரப்பட்டது. எனவே, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட, எமது இறக்குமதிக்கு ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும்.

மசகு எண்ணெய் இறக்குமதிக்கு மாத்திரமே அத்தகைய பாதிப்பு ஏற்படும். இருப்பினும், எம்மிடம் உள்ள மசகு எண்ணெய் கையிருப்பு முழுமையாக ஒரு மாத காலத்திற்குப் போதுமானது.

எனவே, பொதுமக்களை தேவையற்ற முறையில் கலக்கமடைய வேண்டாம்.தேவையற்ற முறையில் பதற்றமடைந்தால் தான் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.