போலி மோதிரத்தை வைத்து விட்டு நூதனமாக தங்க மோதிரம் திருட்டு!

தலவாக்கலை பிரதான நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை, ஒரு நகைக்கடைக்குள் நூதன திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

நகை வாங்குவது போல் கடைக்குள் நுளைந்து, நகைகளை பார்த்துக் கொண்டு கடையுரிமையாளரின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, கையில் மறைத்து வைத்திருந்த போலி தங்க மோதிரத்தை காட்சிப் பெட்டியில் வைத்துள்ளார்.

அதேசமயம், பெட்டியில் இருந்த உண்மையான தங்க மோதிரத்தை எடுத்து மறைத்துள்ளார்.

பின்னர் நீண்ட நேரம் நகைகளை பார்த்து விட்டு, நகை வாங்காமல் மீண்டும் ஒரு தினத்தில் வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்

குறித்த நபர் சென்ற பிறகு கடை ஊழியர்கள் நகைகளை எண்ணி பார்த்த போது, அதில் 50.000 ஆயிரம் பெறுமதியுடைய தங்க மோதிரம் திருடப்பட்டது தெரியவந்தது. அத்துடன் அதேபோல் ஒரு போலியான மோதிரம் ஒன்றும் இருப்பது தெரியவந்தது

பின்னர் நகை கடையில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, போலி மோதிரத்தை நூதன முறையில் வைத்து விட்டு, தங்க மோதிரத்தை திருடியது தெரியவந்தது.

இது குறித்து கடை நிர்வாகி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அந்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், சந்தேக நபரின் CCTV புகைப்படங்கள் கிடைத்துள்ளதாகவும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.