
2016 முதல் அரச சேவையில் இணைந்தோர் தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவு!
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவதற்காக, அவர்களது நியமனக் கடிதங்களைத் திருத்தியமைக்க அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை அந்த அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களினதும் நியமனக் கடிதங்களில் உள்ள ஓய்வூதியம் தொடர்பான சரத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தின்படி அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வூதிய உரிமை கிடைக்கும் என்பதுடன், இனிவரும் காலங்களில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களிலும் ஓய்வூதியம் குறித்த சரத்து இவ்வாறு திருத்தப்பட வேண்டுமென அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
