தேவேந்திரமுனை பகுதியில் துப்பாக்கி சூடு : மீன்வியாபாரி ஒருவர் உயிரிழப்பு!

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாம்பல் நிற கார் ஒன்றில் வந்த குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நபர்களினால் 9 மி.மீ ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகள் மூலம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ‘டிலைட்’ என்று அழைக்கப்படும் 55 வயது மீன் வியாபாரி என்று கூறப்படுகிறது.

இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதுடன், சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.