கந்தளாயில் விபத்து : 24 வயது இளைஞன் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!
கந்தளாய், வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சலகொடல்ல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று நண்பர்கள் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் அதிவேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் இருந்த கட்டடம் ஒன்றில் மோதியதுடன், அங்கிருந்த மரத்திலும் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய ஓட்டுனர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பன்சலகொடல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏனைய இரு நண்பர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகக் கந்தளாய் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வான் எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அளவுக்கு அதிகமான வேகமும், ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்தமையுமே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
