பாகிஸ்தானியர்களுக்கான விசா கட்டுப்பாட்டை தளர்த்துமாறு பணிப்புரை!

பாகிஸ்தானின் மத்திய உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருமான மோசின் நக்வி உடனான சந்திப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தானை அனைத்து “எதிர்மறை” விசா பட்டியல்களிலிருந்தும் உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரஜைகளுக்கான பயண வசதிகளை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.

இச்சந்திப்பின் போது, பாகிஸ்தானியர்கள் இலங்கை விசாவைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களை நக்வி சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாகிஸ்தானை கட்டுப்பாடுகள் உள்ள விசா பிரிவுகளிலிருந்து நீக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த முடிவு சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பயணிகளுக்குப் பெரும் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி மற்றும் வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுக்கான அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சவாலான காலப்பகுதிகளில் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

மேலும், இலங்கைப் பிரதமர் விரைவில் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் அவர் அறிவித்தார்.