கனடா அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி நியூசிலாந்து அணி ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி!

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில், கனடா அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்திய நியூசிலாந்து அணி, ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். இதன்படி களமிறங்கிய கனடா அணிக்கு, இளம் வீரர் யுவராஜ் சம்ரா மற்றும் தலைவர் தில்ப்ரீத் பஜ்வா ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.

64 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் சம்ரா, 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 110 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். டி20 உலகக் கிண்ண வரலாற்றில் சதம் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுவராஜ் சம்ரா மற்றும் அணித்தலைவர் தில்ப்ரீத் பஜ்வா ஜோடி முதல் விக்கெட்டுக்காகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்தது. தில்ப்ரீத் பஜ்வா 36 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன்படி, 174 என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.

நியூசிலாந்து அணி வெறும் 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இவர்கள் இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

நியூசிலாந்து அணி சார்பில் க்ளென் பிலிப்ஸ் 76 ஓட்டங்களையும் மற்றும் ரச்சின் ரவீந்திர 59 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.