புகை விசிறும் பணிகள் முன்னெடுப்பு
-அம்பாறை நிருபர்-
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று சனிக்கிழமை விசேட புகை விசிறும் (Fogging) நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு மற்றும் துப்புரவுப் பணிகளைத் தொடர்ந்து அதன் இரண்டாம் கட்டமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய, கல்முனை மாநக சபையின் ஒத்துழைப்புடன் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி எஸ்.எப்.சாரா சராப்டீன் தலைமையில் நடைபெற்ற இந்த களப்பணியில், டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் இலக்கு வைக்கப்பட்டன. குறிப்பாக, மக்கள் குடியிருப்புகள் மற்றும் வீடுகள், பாடசாலை வளாகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், மதஸ்தாபனங்கள் மற்றும் பொது இடங்களில் Fogging பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் தடுப்பு நடவடிக்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு கள உதவியாளர்கள் இணைந்து மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இச்செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
