வாகன இலக்கத் தகடு எப்போது கிடைக்கும்?- வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது சுமார் 4 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டிய நிலையில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய உற்பத்தி நடவடிக்கைகள் சர்வதேச தரத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னைய ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதை அடுத்து, இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதன் காரணமாக ஏற்பட்ட தட்டுப்பாட்டினால், வாகன உரிமையாளர்கள் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவதற்கு திணைக்களம் அதுவரை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நிலுவையில் உள்ள பெருமளவிலான இலக்கத் தகடுகளை விரைவாக அச்சிட்டு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
