கடமைப் பளு தாங்க முடியாமல் கான்ஸ்டபிள் செய்த காரியம்

ஓய்வு இல்லாமல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை மற்றும் கடும் மன அழுத்தம் காரணமாக கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்ற சம்பவம் அளுத்கம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியவர், மாத்தறை கெகனதுர பிரதேசத்தைச் சேர்ந்தவரும், அளுத்கம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றியவருமாவார்.

அளுத்கம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த அதிகாரி, இன்று சனிக்கிழமை பகல் ஓய்வின்றித் தொடர்ச்சியாகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதால் கடும் உளவியல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதன் காரணமாக தம்மால் இனி கடமையைத் தொடர முடியாது எனக் கூறி, பொலிஸ் நிலைய தகவல் புத்தகத்தில் குறிப்பொன்றை இட்டுவிட்டு, தனது தனிப்பட்ட உடைமைகளையும் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.