-யாழ் நிருபர்-
நீண்ட காலம் புனரமைப்பு செய்யப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டுவரும் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி – பருத்தித்துறை வீதி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கில் பெய்துவரும் தொடர் கனமழையால் மருதங்கேணி – பருத்தித்துறை வீதி முற்றாக பாதிப்படைந்துள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பெருமளவு நிதியில் புனரமைக்கப்பட்ட குறித்த வீதி இன்றுவரை தரமற்ற வீதியாகவே காணப்படுகின்றது.
இந்த வீதி புனரமைப்பின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு குறித்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ நோயாளிகள், அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள் என பலரும் பயணம் செய்யும் குறித்த வீதி பாழடைந்ததாகவே காணப்படுகின்றது.
இதனால் குறித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதி பயணிக்க முடியாமல் காணப்படுகின்றது.
நீண்டகாலமாக பாழடைந்த இந்த பிரதான வீதியை புனர் நிர்மாணம் செய்து தருமாறு மக்கள் தொடர் கோரிக்கை விடுத்துவருவதுடன், இந்த வருடத்திற்குள் குறித்த வீதி புனரமைக்கப்படுமென அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கூறப்பட்ட போதும், எந்தவித முயற்சிகளும் இதுவரை இல்லாததால் குறித்த வீதி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது.





