300 கோடி ரூபா போதைப்பொருள் விவகாரம்

திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 300 கோடி ரூபா பெறுமதியுடைய பாரிய போதைப்பொருள் தொகை தொடர்பாக, அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.

கடந்த ஜனவரி 25 ஆம் திகதி கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 11 கடற்றொழிலாளர்களுடன் ஒரு பலநாள் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டது.

அதிலிருந்து மீட்கப்பட்ட மொத்தம் 263 கிலோகிராம் போதைப்பொருள் இன்று பலத்த பாதுகாப்புடன் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 15 பாதுகாப்பு பைகளில் ஐஸ் – 109.422 கிலோகிராம், ஹெரோயின் – 112.258 கிலோகிராம் என்பன இருந்தன.

காவல்துறையினரின் சமர்ப்பிப்புகளை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம, குறித்த போதைப்பொருள் மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அதன் தன்மையை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதற்கமைய, நீதிமன்ற பதிவாளரின் மேற்பார்வையின் கீழ், போதைப்பொருள் பொதிகள் அனைத்தும் இலச்சினை இடப்பட்டு, மேலதிக ஆய்வுகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 11 கடற்றொழிலாளர்களிடம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இதன் பின்னணியில் உள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.