காட்டு யானை தாக்குதலில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான விவசாயி உயிரிழப்பு!

கந்தளாய், அக்போபுர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அக்போபுர, யூனிட் 19 பகுதியைச் சேர்ந்த டி.டி. சிறிசேன (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சுமார் 3:00 மணியளவில், சீனிபுர 15 வது வலயத்தில் அமைந்துள்ள தனது நெல் வயலை (வெள்ளாமையை) காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அவர் காவலுக்குச் சென்றுள்ளார்.

இரவு 9:10 மணியளவில் அவர் வயலில் காவலில் இருந்தபோது, அங்கு வந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தற்போது அவரது சடலம் கந்தளாய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், விவசாய நிலங்களுக்குச் செல்லவும், இயல்பான வாழ்க்கையைத் தொடரவும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.