கல்வித்துறையில் பாரிய மாற்றம் – பிரதமர் அறிவிப்பு

இலங்கையின் கல்வித்துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும், அதேநேரம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முறையான டிஜிட்டல் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்ப சாதனங்களை மாணவர்கள் பயன்படுத்தும் போது, அவர்களின் வயது மற்றும் தரங்களுக்கு ஏற்ப, சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டக் கட்டமைப்புக்குள் நின்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாகக் கிடைக்கும் டிஜிட்டல் சாதனங்களை, எவ்வித பாரபட்சமுமின்றி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

மேலும், நவீன டிஜிட்டல் கருவிகளைக் கையாள்வதற்குத் தேவையான முறையான பயிற்சிகள் ஏற்கனவே ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நவீன உபகரணங்களை வினைத்திறனாகப் பயன்படுத்த மனிதவளத் திட்டமிடல் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கல்வி அமைச்சின் ‘இசுருபாய’ அலுவலகத்தில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில், ‘Huawei’ நிறுவனம் மற்றும் யுனெஸ்கோ (UNESCO-INRULED) பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, இலங்கையின் கிராமப்புற பாடசாலைகளுக்கு ‘ஸ்மார்ட் வகுப்பறை’ (Smart Classroom) வசதிகள் மற்றும் ஊடாடும் திரைகளை (Interactive Screens) வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் கல்வி மாற்றத்தை வெறும் உபகரணங்களுடன் மட்டும் நிறுத்தாமல், அவற்றைப் பாதுகாப்பான முறையில் கையாள்வதை உறுதிப்படுத்த காவல்துறையின் இணையக் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் உரிய பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.