2026ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தின் மூலம் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளனர்.
யுத்த காலத்தில் கடமையாற்றி, கடந்த 21 வருடமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடமையாற்றி, தற்போது ஐம்பது வயதை கடந்த நிலையில், இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றம், தமக்கு உள, உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக, கவலை தெரிவித்தனர்.
திருகோணமலை சென்று வருவதாயின், தாம் பெறும் சம்பளம் போக்குவரத்திற்கு மாத்திரம் போதுமானது எனவும், சொத்துக்கடன் மற்றும் ஏனைய கடன்களை பெற்றவர்கள் இதனால் மேலும் பாதிப்புள்ளாகும் அபாயம் உள்ளதாகவும், தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையிலும், பராமரிப்பிலும் பாரிய தாக்கம் ஏற்படும், எனவும் தெரிவித்தனர்.
தம்மை இடமாற்றம் செய்த உயர் அதிகாரிகளை சந்தித்து தமது நிலையினை தெளிவுப்படுத்தி பொருத்தமான இடத்திற்கு இடமாற்றத்தினை செய்யுமாறு கோரப்போவதாகவும், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் சுனில் கந்துநெத்தி ஆகியோரை சந்தித்து தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் தொடர்பாக முறையீடு செய்யவுள்ளதாகவும், மேன்முறையீட்டு சபையின் முடிவு தமக்கு சாதகமாக அமையாத பட்சத்தில் சட்டரீதியாக நியாயம் கோரி மனித உரிமை ஆணைக்குழுவினை நாடவுள்ளதாகவும், அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேலும், ஜனாதிபதி சட்டத்தரனி எம்.ஏ.சுமத்திரனை அணுகி, இந்த விடயம் தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்றதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடமும் தமது நிலமைகள் தொடர்பாக விளக்கமளித்தமையும் குறிப்பிடத்தக்கது.



