பாராளுமன்றம் பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கூடும்

பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின்  தலைமையில் இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கமைய, பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இதற்கமைய பாராளுமன்றம் கூடும் மூன்று தினங்களும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 பெப்ரவரி 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் கீழ் 2396/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதனையடுத்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.