
மட்டக்களப்பில் 4 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற சிறுமியின் தந்தைக்கு விளக்கமறியல்!
மட்டக்களப்பு மாவட்டத்தில், 4 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
வெளி மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நபர், தொழில் நிமித்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், குறித்த நபர் அவரது மகளான 4 வயது சிறுமியை, பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுமியின் தந்தையை கைது செய்த பொலிஸார் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை எதிர்வரும் 29ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
