பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கர வண்டிகள் சேதம்!

கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் நின்றிருந்த பாரிய இத்திமரம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் திடீரென முறிந்து விழுந்ததில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

வைத்தியசாலைக்கு வருகை தந்தவர்கள் தரித்து வைத்திருந்த, இரண்டு முச்சக்கர வண்டிகள் இம்மரம் வீழ்ந்ததில் நசுங்கிப் போயுள்ளன.

அத்துடன், அருகில் இருந்த மின்சார விநியோகக் கம்பிகள் அறுந்து வீழ்ந்துள்ளதோடு, அங்கிருந்த புத்தர் சிலைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மரம் வீழ்ந்த சந்தர்ப்பத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தமையால், உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த கந்தளாய் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மரம் வீழ்ந்தமையால் அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.