தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவனின் சடலம் மீட்பு!

 

-அம்பாறை நிருபர்-

இரவு தூங்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

மாணவனின் தந்தை காலை வேளை தொழுகைக்காக ஆயத்தம் செய்துகொண்டிருந்த போது தனது மகன் தூக்கில் தொங்குவதை அவதானித்துள்ளார்.

சாய்ந்தமருது 16 கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த ஜௌபர் மொஹமட் விஸ்ருல் ஹாபிஸ் (வயது 16) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் 6 மாதங்களாக மன அழுத்தம் தொடர்பில் சிகிச்சை பெற்று வந்திருந்ததாகவும் அத்துடன் 3 மாதங்களாக பாடசாலைக்கு செல்லவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்த பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் கட்டளைக்கமைய சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு பார்வையிட்ட பின்னர் சடலம் மீட்கப்பட்டு கல்முனை ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.