மட்டக்களப்பு கோட்டப் பிரிவு குற்ற விசாரணைப் பணியகம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கடற்படையின் உதவியுடன் 2021.09.07 அன்று கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு ஒப்படைக்கப்பட்ட சுமார் 170 கிலோ கிராம் மொத்த எடையுடைய போதைப்பொருள் தொகுதியின் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் அவற்றை அழிப்பதற்காக குறித்த தொகுதி நேற்று வெள்ளிக்கிழமை காலை வனாத்தவில்லுவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள எரியூட்டி உலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேலதிக பரிசோதனைகளின் மூலம் தெரியவந்ததன்படி, குறித்த தொகுதியில் தூய எடையாக ஹெரோயின் 106 கிலோ கிராம் 248 கிராம் மற்றும் அபீன் போதைப்பொருள் 90.5 கிராம் உள்ளடங்கியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 06.00 மணியளவில், கொழும்பு மதிப்பிற்குரிய நீதவான் நீதிமன்றத்திலிருந்து இப் போதைப்பொருள் தொகுதி பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டு, பொலிஸ் விசேட அதிரடிப் பணிப்படை உள்ளிட்ட விசேட பொலிஸ் பாதுகாப்புடன் போக்குவரத்து செய்யப்பட்டது.
போதைப்பொருள் தொகுதியை பொறுப்பேற்கும் நடவடிக்கையை மேற்பார்வை செய்வதற்காக, பொலிஸ் போதைப்பொருள் பணியகப் பிராந்தியத்திற்கு பொறுப்பிலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசோக தர்மசேன, அபாயகரமான மருந்துகள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் அதிகாரிகள், அரச இரசாயனப் பகுப்பாய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் இதன்போது கலந்து கொண்டனர். (SriLanka Police)




