
சமூக வலைத்தளங்களுக்கு ‘கண்டென்ட்’ உருவாக்கவே தீர்க்கதரிசி வேடம் போட்டேன் – எபோ நோவா
உலகம் முழுவதும் பாரிய பெருவெள்ளம் ஏற்பட்டு அழிந்துவிடும் எனச் சமூக வலைத்தளங்களில் தீர்க்கதரிசனம் கூறி, மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தைப் பரப்பிய எவன்ஸ் எஷுன் (Evans Eshun) என்ற நபர் கானா பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இணையதளங்களில் ‘ஈபோ நோவா’ (Ebo Noah) என்ற பெயரில் தன்னை ஒரு தீர்க்கதரிசியாகக் காட்டி வந்துள்ளார்.
கடந்த நத்தார் பண்டிகைக்கு முன்னதாக உலகம் முழுவதும் பெரும் புயலும் வெள்ளமும் ஏற்பட்டு உலகம் அழியப்போவதாக எவன்ஸ் வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.
ஆனால், அவர் சொன்னது போல எதுவும் நடக்காத நிலையில், ‘கடவுள் அந்த அழிவைத் தள்ளிவைத்துள்ளார்’ எனக் கூறி அடுத்த வீடியோவை பதிவிட்டு மக்களை நம்ப வைத்துள்ளார்.
இவருக்கு எந்தவிதமான மதப் பின்னணியோ அல்லது தேவாலயமோ கிடையாது என்றும், இவர் மதீனா பகுதியில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிந்தவர் எனவம் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரது கருத்துக்களை நம்பி வெளிநாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் கானாவிற்கு வந்துள்ளனர். குறிப்பாக, இவரது ‘கப்பலில்’ ஏறித் தப்பிப்பதற்காக லைபீரியாவிலிருந்து ஒருவர் நீண்ட தூரம் பயணம் செய்து கானாவிற்கு வந்துள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எனினும், சமூக வலைத்தளங்களுக்காக வெறும் ‘கண்டென்ட்’ உருவாக்கவே தான் இவ்வாறு செய்ததாக எவன்ஸ் தற்போது கூறி வருகின்றார்.
இந்தநிலையில், பொதுமக்களை அச்சத்துக்குள்ளாக்கியமை மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு மனநலப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
