சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பெரியநீலாவணை பொலிஸார்!

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள விஸ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள குளத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முதலை கடித்த நிலையில் ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களால் பெரியநீலாவணை கிராமசேவகருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அங்கு சென்ற பெரியநீலாவணை பொலிசார் சடலத்தை மீட்டனர்

மீட்கப்பட்ட சடலம் 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் சுமார் 55 வயது முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க நபருடையது எனவும் சடலத்தின் வலது கால் பகுதி இல்லாத நிலையிலும் முகத்தின் ஒரு பகுதி சிதைவடைந்தும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவிகளை நாடியுள்ளனர்.

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரனின் வழிகாட்டுதலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.