இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் டக்ளஸ் தேவானந்தா!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சனிக்கிழமை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.

கம்பஹா நீதிவான் முன்னிலையில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, கம்பஹா – வெலிவேரிய பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.

குறித்த துப்பாக்கி, டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டது என ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, டக்ளஸ் தேவானந்தா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.