
மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்
-மன்னார் நிருபர்-
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது.
கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனர் ஏ.ரி.மேகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 10.25 மணியளவில் குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 21 வது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


