சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்!

கிறிஸ்துமஸ், நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் வருட இறுதிப் பண்டிகைகளை முன்னிட்டு இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சடுதியாக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பயணிகளின் நெரிசலைக் குறைக்க சாரதிகளின் ஒத்துழைப்பு அவசியம் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி இன்று புதன்கிழமை வலியுறுத்தினார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி டிசம்பர் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 162,026 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன.

இதில் கொழும்பு – கட்டுநாயக்க வீதியில் மட்டும் 44,013 வாகனங்கள் பயணித்துள்ளன.

அத்துடன் டிசம்பர் 23 இந்த எண்ணிக்கை 163,918 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக சீதுவ வெளியேறும் வாயிலில் மாத்திரம் 18,681 வாகனங்கள் வெளியேறியுள்ளன.

நெரிசலைக் குறைக்க ஓட்டுநர்களுக்கான 4 முக்கிய ஆலோசனைகள்:

சுங்கச் சாவடிகளை (Toll Exits) நெருங்கும் போது, நுழைவுச் சீட்டு (Ticket) மற்றும் பணத்தை அல்லது அட்டைகளை (Cards) தயாராக வைத்திருக்க வேண்டும்.

ரொக்கப் பணத்தைப் பயன்படுத்துவோர் சரியான தொகையை (Exact change) செலுத்துவதன் மூலம் காலதாமதத்தைத் தவிர்க்கலாம்.

பொதுவாக ஒரு வாகனத்திற்கு 12 முதல் 15 வினாடிகளே பணம் செலுத்தத் தேவைப்படும்.

சுங்கச் சாவடி ஊழியர்களிடம் வீதி நிலைமைகள் அல்லது போக்குவரத்து நெரிசல் குறித்து உரையாடுவதால் பின்னால் வரும் வாகனங்களுக்குத் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.

இலத்திரனியல் சுங்கச் சேகரிப்பு (ETC) வசதி தற்போது கொழும்பு – கட்டுநாயக்க வீதியில் மட்டுமே உள்ளது.

ETC பயனர்கள் கண்டிப்பாக அதற்காக ஒதுக்கப்பட்ட பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சாதாரண பாதைகளில் நுழையும் போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுகின்றன.