மட்டு செட்டிபாளையத்தில் விபத்துக்குள்ளான வேன் – ஒருவர் காயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியின், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில், மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன், செட்டிபாளையம் பாடசாலைக்கு முன்னால் பயணிக்கும் போது, சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த அரச மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேன் விபத்தில் சிக்கிய சந்தர்ப்பத்தில் சாரதி மட்டுமே வேனில் பயணித்துள்ளதோடு, விபத்தில் காயமடைந்த அவர் அவசர சேவை நோயாளர் காவுவண்டி மூலம், வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.