மட்டக்களப்பில் பிள்ளையானின் மற்றுமோர் சகா கைது ?

-க.சரவணன்-

பிள்ளையானின் முக்கிய சகா ஒருவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வாழைச்சேனை கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று புதன்கிழமை கொழும்பில் இருந்து வந்த குற்ற விசாரணைப் பிரிவினர் (சிஜடி) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்த போது குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்துவிட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்த நிலையில் , நான்கு நாட்களின் பின்னர் கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானிடம் மேற்கொண்டுவரும் விசாரணையின் அடிப்படையில் பிள்ளையானின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை