
அனர்த்தங்களில் சேதமடைந்த வாகனங்கள் தொடர்பில் அறிவிப்பு!
சமீபத்திய அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்களை தற்போது திரட்டி வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்குப் பின்னர் மாவட்ட மட்டத்தில் விசேட நடமாடும் சேவை ஒன்றை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சேதமடைந்த வாகனங்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவை மீண்டும் பயன்பாட்டிற்கு பொருத்தமானவையா, இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அனர்த்த நிலைமை காரணமாக சிலரது வாகனங்களும் அத்துடன் அவற்றின் ஆவணங்களும் சேதமடைந்துள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்தத் தகவல்களையும் பெற்றுக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட நபர்கள், தாங்கள் வசிக்கும் கிராம சேவைப் பிரிவின் கிராம அலுவலருக்கு இது குறித்துத் தெரியப்படுத்த வேண்டும்.
கிராம அலுவலர் ஊடாக பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவித்து, பொலிஸ் முறைப்பாடு ஒன்றைச் செய்வது அத்தியாவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
விசாரணைகளை ஆரம்பிப்பதற்கும், இந்தச் சூழ்நிலையைச் சரியாக முகாமைத்துவம் செய்வதற்கும் பல்வேறு தரப்பினரிடமிருந்து சரியான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வது முக்கியம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
தற்போதுள்ள நிலைமை காரணமாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வருவதால், இதனைக் கருத்திற் கொண்டு விசேட அலகு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதற்கமைய, 070 7188866 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக அத்தியாவசிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் சேதமடைந்த வாகனங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக உங்களிடம் ஏதேனும் சான்றுகள் இருந்தால், அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இது எதிர்கால நடவடிக்கைகளுக்கு வசதியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
