
ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : தாய் உயிரிழப்பு – தந்தையும், மகளும் வைத்தியசாலையில்!
-அம்பாறை நிருபர்-
வீடு ஒன்றினுள் பாவனையில் இருந்த ஜெனரேட்டரில் இருந்து, வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கல்முனைக்குடி 5 பிரிவு புதிய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம், கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் அச்சமயம் இருந்த, தாய், தந்தை, மகள் ஆகியோர் இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழமை போன்று உறக்கத்துக்கு சென்ற தனது பெற்றோர்கள், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை எழும்பவில்லை என சந்தேகமடைந்த மகள் உடனடியாக தனது உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.
அங்கு வந்த உறவினர்கள், வீட்டில் இருந்த ஜெனரேட்டரில் இருந்து கசிந்த வாயுவினால் ஏதோ இடம்பெற்றிருப்பதாக சந்தேகித்து, உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.
இவ்வனர்த்தத்தில் புதிய வீதியில் வசித்து வந்த குடும்ப பெண்ணான, அலியார் பஸ்மிலா (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காபன் மொனொக்சைட் காற்றுடன் கலந்து நஞ்சாகியதால், அதை சுவாசித்த நிலையில் குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்து, மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவத்தார்.
அத்துடன், குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தை, மகள் ஆகியோர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
