-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2397 குடும்பங்களை சேர்ந்த 7513 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவுகளில் 130 குடும்பங்களைச் சேர்ந்த 390 அங்கத்தவர்கள் 12 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.
1580 குடும்பங்களை சேர்ந்த 4993 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 01வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 108 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் புங்குடுதீவிலிருந்து குறிக்கட்டுவான் வரையான தரைப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் குறிக்கட்டுவானிலிருந்தான சகல படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நெடுந்தீவு, நயினா தீவு, எழுவை தீவு, அனலை தீவிற்கான படகுசேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் தங்குவதற்கான பாதுகாப்பு நிலையங்கள் பிரதேச செயலாளர் பிரிவுரீதியாக அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கிராம சேவையாளரின், பிரதேச செயலாளரின் உதவியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.




